Introduction

முன்னுரை

ப்ரார்த்தனை

ப்1ரத2மம் ஸத்3கு3ரும் வந்தே3 ஸ்ரீ கி1ருஷ்ணம் த13னந்த1ரம்

கு3ருஹு பா1பா1த்1த்மநாம் த்1ராதா1 ஸ்ரீ க்1ருஷ்ணஸ்த1வமலாத்1மநாம்

 

முகு1ந்தா3னந்த3 ப்ரப1ன்னோஹம் கு1ரு பா1தா1ர விந்த3யோஹோ

1ஸ்ய பி 1ரேரணயா த1ஸ்ய தி3வ்யாதே3ஶம் வதா3ம்யஹ

‘நான் முதன்மையாக என்னுடைய குருநாதர் ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹாராஜுக்கும், பின்னர் ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் எனது மரியாதையான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.’ உலகில் முகுந்தாநந்தா என்ற பெயரைக் கொண்ட இந்த சிறப்பில்லாத ஆத்மா தனது ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களில் சரணடைகிறது. அவரது குருவின் அனுமதி, ஊக்கம் மற்றும் கருணையுடன், அவர் தாழ்மையடன் ஆன்மீகத் தலைப்புகளை தெளிவுபடுத்தப் போகிறார்,

வந்தே3 வ்ரிந்தா3வனானந்தா3ம் ராதி4கா1ம் ப1ரமேஶ்வரீம்

கோ3பி1காம் ப1ரமாம் ஶூத்3தா3ம் ஹ்லாதி3னீம் ஸக்2தி1 ரூபி1ணீம்

‘நான் எனது மரியாதைக்குரிய கீழ் படிதலை ஒப்புயர்வற்ற தேவி, மற்றும் ஆனந்தத்தை கொடுக்கும் கடவுளின் சக்தியான ராதா ராணிக்கு, வழங்குகிறேன். ராதா ராணி கோபிகைளில் மிகவும் தூய்மையானவர் மற்றும் வ்ருந்தாவனத்தின் பேரின்பத்தை உணர்த்துபவர்.’

1தா3 த்3ரக்ஷ்யாமி நந்த3ஸ்ய பா3லக1ம் நீப1மாலக1ம்

 பா1லக1ம் ஸர்வ ஸத்1வானாம் லஸத்1தி1லக பா4லக1ம்

இந்த பூமியில் நந்தகோபனின் புதல்வராக தோன்றிய பரம ஸ்ரீ கிருஷ்ணரின் அற்புதமான வடிவத்தை என் கண்கள் எப்பொழுதும் பார்க்கும்? கழுத்தில் மலர் மாலையையும் நெற்றியில் புனித திலகத்தையும் கொண்டுள்ள அவர் நற்குணம் மிக்கவர்களின் பாதுகாவலர்.

அஜாத11க்ஷா இவ மாத1ரம் க1கா3ஹா

ஸத2னயம் யதா2 வத்1ஸத1ராஹா க்ஷுதா4ர்தா1ஹா

ப்1ரியம் ப்1ரியேவ வியூஷித1ம் விஷண்ணா

மனோரவிந்தா3க்ஷ தி3த்3ரிக்ஷதே1 த்1வாம்

ஒப்புயர்வற்ற இறைவனே, பறவைக்குட்டி தன் தாய்க்காக ஏங்குவது போலவும், பசியில் தவிக்கும் சிசு தாயின் பால் குடிக்க ஏங்குவது போலவும், காதலன் காதலிக்காக ஏங்குவது போலவும், என் மனம் எப்பொழுதும் உனது தெய்வீக தரிசனத்திற்காக ஏங்குகிறது.

 

அறிவின் ஏறும் மற்றும் இறங்கும் செயல்முறைகள்

அறிவைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது, ஏறும் செயல்முறையாகும், இதில் நாம் நமது புலன்கள், மனம், மற்றும் அறிவாற்றலைப் பயன்படுத்தி உண்மையின் தன்மையை ஆராயவும், கண்டறியவும், முடிவு செய்யவும் பயன்படுத்துகிறோம். இரண்டாவது, நாம் சரியான மூலத்திலிருந்து அறிவைப் பெறும் இறங்கும் செயல்முறையாகும். அறிவைப்- பெறுவதற்கான ஏறும் செயல்முறை இயல்பாகவே குறைபாடுகளுக்கு உட்படும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. நமது புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவை பொருள் ஆற்றலால் உருவாக்கப்பட்டதால், அவை குறைபாடுகள் கூடியவை மற்றும் வரையறுக்கப்பட்டவை. இதன் விளைவாக, அவற்றின் மூலம் பெறும் அறிவின் திட்பநுட்பம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து நாம் முற்றிலும் உறுதியாக இருக்க முடியாது.

பொருள் அறிவியலின் பின் தொடர்தல் ஏறும் செயல்முறையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், கடந்த காலத்தின் மிகவும் பாராட்டப்பட்ட, மற்றும் மறுக்க முடியாத அறிவியல் கோட்பாடுகள் கூட கைவிடப்பட்டு, புதியவற்றால் மாற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பொருள் பிரிக்க முடியாத அணுக்களைக் கொண்டது என்ற கிரேக்கக் கருத்து, அணுக்கள் மின் அணுக்கள் (எலக்ட்ரான்கள்), அணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம்,(புரோட்டான்கள்) நொதுமம், மின் இயக்கமில்லாத சிற்றணுத்துகள் (நியூட்ரான்கள்) மற்றும் வெற்று இடத்தின் பரந்த பகுதிகளைக் கொண்டிருப்பதாக நிரூபித்த ரூதர்போர்ட் அவர்களால் செல்லாததாக்கப்பட்டது. ரூதர்ஃபோர்டின் கோட்பாடுகள் குவைய கோட்பாட்டால் (குவாண்டம்கோட்பாட்டால்) முறியடிக்கப்பட்டது. எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் உண்மையில் திடமான துகள்கள் அல்ல. அவை இரட்டை துகள் அலை இயல்புடைய அதிர்வுறும் ஆற்றல் வடிவங்கள் என்று குவாண்டம் கோட்பாடு கூறியது. இன்று நாம் உண்மை என்று நம்புவது சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு முற்றிலும் தவறானது என்று நிரூபிக்கப்படுமா என்று இது நம்மை வியக்க வைக்கிறது.

மறுபுறம், அறிவின் இறங்கும் செயல்முறை, முற்றிலும் அத்தகைய குறைபாடுகள் இல்லாதது. ஒரு சரியான மூலத்திலிருந்து நாம் அறிவைப் பெறும் பொழுது, அது குறைபாடற்றது என்று நாம் உறுதியாக நம்பலாம். உதாரணமாக, நம் தந்தை யார் என்பதை அறிய விரும்பினால், நாம் சோதனைகளை நடத்துவதில்லை. இந்த தகவலின் மீது அதிகாரம் பெற்ற நமது தாயாரைக கேட்கிறோம். அவ்வாறே, ஆன்மிக விஷயங்களிலும், அறிவின் இறங்கு செயல்முறையானது, நீண்டகால சுய முயற்சியின் விளைவால் வெளிப்படுத்தப்பட்ட அறிவுத்தேக்கங்களை உடனடியாக நமக்கு தருகிறது. இங்குள்ள ஒரே அளவுகோல் என்னவென்றால், நாம் அறிவைப்பெறுகின்ற மூலமானது தவறாததாகவும் மற்றும் .நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். வேதங்கள் அத்தகைய அறிவின் ஒரு ஆதாரமாகும்.

வேதங்கள் என்பது ஒரு நூலின் பெயர் அல்ல. அவை கடவுளைப் பற்றிய நித்திய அறிவைக்குறிக்கின்றன. இந்த நித்திய அறிவை அவர் உலகைப்படைக்கும் பொழுது வெளிப்படுத்துகிறார். இந்த சிருஷ்டி சுழற்சியில், முதலில் பிறந்த ப்ரஹ்மாவின் இதயத்தில் அவற்றை முதலில் வெளிப்படுத்தினார். இந்த வேதங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாய்வழி பாரம்பரியத்தால், குருவிடமிருந்து சீடருக்கு வழங்கப்பட்டது. எனவே, அவற்றுக்கான மற்றொரு பெயர் ஶ்ருதி1 (கேட்பதன் மூலம் பெறப்பட்ட அறிவு) என்பதாகும். அவை பௌ1ருஷேய (எந்த மனிதராலும் உருவாக்கப்படாதது) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த காரணத்திற்காக, இந்திய தத்துவத்தில் வேதங்கள் எந்தவொரு ஆன்மீக கொள்கையையும் உறுதிப்படுத்துவதற்கான இறுதி அதிகாரமாக கருதப்படுகின்றன. எந்த ஒரு ஆன்மீக கொள்கையின் கோட்பாடுகளும் வேதங்களின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும். பல வேத நூல்கள் எழுதப்பட்டாலும் இந்த வேத நூல்கள் வேதங்களின் அதிகாரத்தில் இருந்து விலகவில்லை. மாறாக, அவை அவற்றிலுள்ள அறிவை விரிவுபடுத்தி விளக்க முயல்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து, ‘வேத நூல்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

வேத நூல்கள் மிகவும் பரந்தகன்றவை. ஆனால் அவற்றில் மூன்று பாரம்பரியமாக வேத சிந்தனையைப் புரிந்துகொள்வதற்கான மூன்று தொடக்க புள்ளிகள் (ப்1ரஸ்தா2ன் த்1ரயீ) என்று அழைக்கப்படுகின்றன. இவை உபநிஷதங்கள், ப்ரஹ்மஸுத்திரங்கள் மற்றும் பகவத் கீதை ஆகியவை.

உபநிஷதங்கள் தத்துவ அறிவை வழங்கும் வேதங்களின் ஒரு பகுதியாகும், மேலும், அவை வேதங்களின் சாரம் என்று கருதப்படுகின்றன. அவற்றைப் படித்த ஜெர்மானிய தத்துவஞானி ஆர்தர் ஸ்கோபன்ஹவுர் (1788-1860) கூறினார், ‘உபநிஷதங்களைப் போல உயர்ந்த தத்துவம் உலகில் இல்லை. இவை என் வாழ்க்கையின் ஆறுதலாக இருக்கிறது மற்றும் என் மரணத்திலும் ஆறுதல் அளிக்கும்.’ .மற்றொரு ஜெர்மானியத் தத்துவஞானி பால் டியூசென் தனது கருத்தை பின்வருமாறு வெளிப்படுத்தினார்: ‘நித்திய மெய்யியல் தத்துவத்தின் உண்மை உபநிஷதங்களில் மிகவும் அரிதான, குறிப்பிடத்தக்கதான, மற்றும் தீர்கமான வெளிப்பாட்டை கண்டறிந்துள்ளது.’ இருப்பினும், ஒரு சராசரி மனிதனுக்கு உபநிஷதங்களை புரிந்துகொள்வது கடினம்.

ப்ரஹ்ம ஸுத்திரங்கள் உபநிஷதங்களின் சுருக்கமாகும். இவை வேத அறிவின் தத்துவ முடிவுரையை வழங்க வேத வியாஸரால் எழுதப்பட்டவை. எனவே, இது ‘வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது ‘வேத சிந்தனையின் உச்சகட்டம்’. உபநிஷதங்களைப் போலவே, ப்ரஹ்ம ஸூத்திரங்களும் புரிந்துகொள்வது கடினம் மற்றும் அதன் சுருக்கமானது பெரும்பாலும் தெளிவின்மை மற்றும் அகவழி விளக்கத்திற்கு வழிவகுக்கிறது.

பகவத் கீதை மேற்கூறிய இரண்டு வேதங்களை விட அதிகமாக அணுகத்தக்கது. இது வேத தத்துவத்தின் விரிவான, மற்றும் எளிதில் புரிந்துக்கொள்ளக்கூடிய சுருக்கத்தை வழங்குகிறது. பகவத் என்றால் ‘கடவுளின்’ மற்றும் கீதை என்றால் ‘பாடல்’. எனவே, பகவத் கீதையின் அர்த்தம் ‘கடவுளின் பாடல்.’ இது மகாபாரதப் போரின் விளிம்பில், ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவரது பக்தரான அர்ஜுனனுக்கும் இடையே நடந்த உரையாடல்.

வரலாற்றின் போக்கில், பொருளாதாரம், உளவியல், சமூகவியல், தத்துவம் போன்றவற்றில் நூற்றுக்கணக்கான கோட்பாடுகள் முதலில் முன்வைக்கப்பட்டு, பின்னர் துல்லியமற்றவை அல்லது முழுமையற்றவை என்று நிராகரிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஏறும் செயல்முறை அறிவின் தயாரிப்புகள், எனவே, முழு நிறைவுபெறாதவை மற்றும் பிழைக்கு உட்பட்டவை. பகவத் கீதை ஐம்பது நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஒரு நிலையற்ற மற்றும் வரையறுக்கப்பட்ட புத்தியின் உருவாக்கம் எனின், அது காலம் கடந்த மற்றும் பொருத்தமற்றதாக மாறியிருக்கும. இருப்பினும், கீதையின் வற்றாத ஞானம், மகாத்மா காந்தி, ராபர்ட் ஓப்பன்ஹைமர், கார்ல் ஜூங், ஹெர்மன் ஹெஸ்ஸி மற்றும் ஆல்டஸ் ஹக்ஸ்லி போன்ற பிரபலமான சிந்தனையாளர்களை நவீன காலத்திலும் தொடர்ந்து ஊக்குவித்தன் மூலம் அதன் தெய்வீக தோற்றத்தை உறுதிப்படுத்துகிறது.

மகாபாரதத்தில் பொதிந்துள்ளது

பகவத்கீதை, முதலில் வேத வியாஸரால் தனி நூலாகத்தொகுக்கப்பட்டது. பின்னர், அவர் மகாபாரதத்தை எழுதிய பொழுது பகவத்கீதை அவரால் அதில் பதிக்கப்பெற்றது, ஒரு லட்சம் வசனங்களைக் கொண்டுள்ள மகாபாரதம் உலகின் மிகப்பெரிய கவிதை. இது இலியாட் மற்றும் ஒடிஸியை விட ஏழு மடங்கு பெரியது, மற்றும் பைபிளை விட மூன்று மடங்கு பெரியது. ராமாயணத்துடன் இது, இந்திய வரலாற்றின் கையெழுத்துப்பிரதி என்று பொருள்படும் இதி1ஹாஸ் என்ற தகுதியையும் பெற்றுள்ளது. அதன் கதைகள் மற்றும் தார்மீக வழிமுறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய கலாச்சாரத்தின் கட்டமைப்பை வடிவமைத்துள்ளன. பதினெட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள மகாபாரதத்தின் பீ4ஷ்ம ப1ர்வ என்று அழைக்கப்படும் ஆறாவது பிரிவில் பகவத் கீதை ஆனது அமைக்கப்பட்டுள்ளது. பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத் கீதை அத்தியாயம் இருபத்தைந்தாவது அத்தியாயத்திலிருந்து துவங்கி, அத்தியாயம் நாற்பத்தி இரண்டு வரை தொடர்கிறது. பகவத் கீதை வேதங்களின் அறிவின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதால், இது கீதோபநிஷதம் அல்லது கீதா உபநிஷதம் என்றும் அழைக்கப்படுகிறது. கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி இது இரண்டு முக்கிய நோக்கங்களுக்கு உதவுகிறது.

இது ப்ரஹ்ம வித்தையை வழங்குகிறது

மனிதகுலம் தனது அறிவின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டு தைரியமாக

முன்னோக்கிச்-செல்லும் பொழுது, நாம் எவ்வளவு அதிகமாகக் கண்டுபிடித்து கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக இன்னும் அறியப்பட வேண்டியவை உள்ளன என்ற உணர்தல் விடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய அறிவியல்கள் வெளிவருகின்றன. இந்த படைப்பின் முழு உண்மையையும் புரிந்துகொள்வதற்கான தேடலானது ஒரு முடிவில்லாத முயற்சி என்ற தவிர்க்க முடியாத முடிவிற்கு வழிவகுக்கிறது. இந்த தேடல் அனைத்தையும் எளிதில் விளக்கக்கூடிய ஒரு அறிவின் கிளை அல்லது அறிவு ஆதாரம் உள்ளதா என்று ஒருவரை ஆச்சரியப்பட வைக்கிறது. வேதங்களின்படி, அத்தகைய அறிவின் ஒரு கிளை உள்ளது, அதுவே உணரும் அறிவியல். ஈஸ்வர், பகவான், கடவுள், இறைவன், அல்லா, குதா, யாவே, அஹுர் மஸ்தா, அலக் நிரஞ்சன், ஶுன்ய, ஏகோம்கர் போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படும் முழுமையான உண்மை ஒன்று உள்ளது. மற்ற எல்லா உண்மைகளும் அதிலிருந்து வெளிப்பட்டு, அதிலிருந்து தொடர் நடவடிக்கை திட்டத்தில் தங்கள் நிலையைக் கண்டறிகின்றன. எனவே,வேதங்கள் ‘ஏக1ஸ்மின் விஞ்ஞாதே1 ஸர்வமித3ம் விஞ்ஞாத1ம் ப4வதி1,’ ‘முழுமையான உண்மையை அறிந்தவன் எல்லாவற்றையும் பற்றிய அறிவை அடைகிறான்.’ என்று கூறுகின்றன. பூரணமான உண்மையை அறியும் விஞ்ஞானம் ப்3ரஹ்ம வித்3யா என்று அழைக்கப்படுகிறது. பகவத் கீதையின் முதன்மையான நோக்கம் கடவுளை உணரும் அறிவியலான ப்ரஹ்ம வித்தையை வழங்குவதாகும்.

இரண்டு விதமான அறிவொளிகளில் ஒரு நபருக்கு உடனடி பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் அறிவு ஒரு வகையான அறிவொளி. மற்றும் அறியாமையின் வேரை அகற்றி அனைத்து பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் தீர்க்க இயலும் அறிவானது மற்றொரு வகையான அறிவொளி ஆகும். மேலே கூறிய இரண்டாவது அறிவொளியை நோக்கமாகக் கொண்ட பகவத் கீதை முடிவற்ற வாழ்நாட்களாக ஆன்மாவை சூழ்ந்துள்ள அறியாமை இருளை அழிக்கிறது. உடனடி பிரச்சனையை தீர்க்க இயலாத, அர்ஜுனன் தான் அனுபவிக்கும் வேதனையை சமாளிக்க ஸ்ரீ கிருஷ்ணரை அணுகினார். ஸ்ரீ கிருஷ்ணர் அவருடைய உடனடிப் பிரச்சனையைப் பற்றி அறிவுரை கூறியது மட்டுமல்லாமல் வாழ்க்கையின் தத்துவத்தைப்பற்றியுமான ஆழமான சொற்பொழிவைக் வழங்கினார்.

இது யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கிறது

எந்தவொரு அறிவியலும் பயனுள்ளதாக இருக்க அது இரண்டு அம்சங்களைக் விவரிக்க வேண்டும்-- கோட்பாடு மற்றும் நடைமுறை. வாழ்க்கையின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறந்த தத்துவார்த்த அறிவு கூட போதுமானதாக இல்லை. அறிவு நடைமுறைக்கு வரவில்லை என்றால், அது அறிவுசார் பொழுதுபோக்கின் நோக்கத்திற்கு மட்டுமே உதவுகிறது. பகவத் கீதை ஒரு உயர்ந்த தத்துவ ஞானத்தை வழங்குவது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் அதன் ஆன்மீக விதிகளை செயல்படுத்துவதற்கான தெளிவான நுட்பங்களையும் வழங்குகிறது. ஆன்மீக அறிவியலை நம் வாழ்வில் பயன்படுத்துவதற்கான இந்த நுட்பங்கள் ‘யோகம்’ என்று அழைக்கப்படுகின்றன. எனவே, பகவத் கீதை யோக ஶாஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது யோகப் பயிற்சியைக் கற்பிக்கும் வேதம்.

அனுபவமற்ற ஆன்மீக பயிற்சியாளர்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை தற்காலிக வாழ்க்கையிலிருந்து பிரிக்கிறார்கள்; சிலர் பரமானந்தத்தை மறுமையில் அடைய வேண்டிய ஒன்றாக பார்க்கிறார்கள். ஆனால் பகவத் கீதை அத்தகைய வேறுபாட்டைக் காட்டவில்ல. மேலும், இந்த உலகில் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அர்ப்பணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் விளைவாக அதன் பதினெட்டு அத்தியாயங்களும் பல்வேறு வகையான யோகங்களாக நியமிக்கப்பட்டுள்ளன. ஏனெனில், அவை ஆன்மீக அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை விவரிக்கின்றன. இந்த அத்தியாயங்கள் கர்ம, ஞான மற்றும் பக்தி-யோகம் போன்ற பல்வேறு யோக அமைப்புகளையும் விவரிக்கின்றன.

பகவத் கீதையின் அமைப்பு

உண்மை ஒன்று மற்றும் நித்தியமானது என்றாலும், வெவ்வேறு காலங்களில் அது பல்வேறு இடங்களில் தன்னை வெளிப்படுத்துகிறது, அது அதன் விளக்கக்காட்சிக்கு அவற்றின் தனித்துவமான சுவையை அளிக்கிறது. எனவே பகவத் கீதையின் போதனையை ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட பொதுவான தத்துவம் அல்லது நெறிமுறைக் கோட்பாட்டின் கண்ணோட்டத்தில் மட்டும் கருதப்படக்கூடாது. ஒரு குறிப்பிட்ட நெருக்கடியான சூழ்நிலையில் மனித வாழ்க்கைக்கு நெறிமுறைகளின் நடைமுறை பயன்பாடுதான் அதன் அமைப்பாக செயல்படுகிறது. பகவத் கீதையின் போதனைகள் மிகவும் ஆழமானவை என்பதால், அதன் படைப்புச்சூழ்நிலை சமமான, சிக்கலான மற்றும் தீர்க்க முடியாத நெருக்கடியைக் கோரியது. எனவே, அதன் கருத்துகளின் மதிப்பை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, குருக்ஷேத்திரப்போர்க்களத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தெய்வீக தத்துவத்தை பேசுவதற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரலாற்று ஓட்டமும் அறியப்பட வேண்டும்.

பகவத்கீதை மாபெரும் மகாபாரதப்போரின் தொடக்கத்தில் உரையாற்றப்பட்டது. இது இரண்டு உறவினர்களான கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் இடையே துவங்க இருந்த ஒரு மாபெரும் போர். பாண்டவர்கள் -- யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகதேவன் - ஆகியோர் ஐந்து உன்னத சகோதரர்கள். அவர்களின் தந்தை, பாண்டு, அவரது ஐந்து மகன்களின் இளமை பருவத்திலேயே துரதிர்ஷ்டவசமாக இறந்தார். பாண்டுவின் அரியணை அவரது மாற்றாந்தாய் சகோதரரான திருதராஷ்டிரரால் கைப்பற்றப்பட்டது. திருதராஷ்டிரருக்கு கௌரவர்கள் என்று அழைக்கப்படும் நூறு மகன்கள் இருந்தனர், அவர்களில் மூத்தவன் துரியோதனன். பல ஆண்டுகளாக, பாண்டவர்கள் துரியோதனனால் பாதிக்கப்பட்டனர். கௌரவர்கள் துரியோதனன் தலைமையில் அவர்களுக்கு உரிமையில்லாத ஹஸ்தினாபூர இராஜ்யத்தை ஆண்டு வந்தனர்.

கௌரவர்கள் கொடுமை, அநீதி, துன்மார்க்கம், அடக்குமுறை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றைக்கொண்டிருந்தனர். மறுபுறம், பாண்டவர்கள் புனிதமானவர்களாகவும் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் இருந்தனர். ஒழுக்கம், தியாகம், பக்தி, மற்றும் இரக்கத்தின் உருவகங்களாக திகழ்ந்தனர். மிக முக்கியமாக, அவர்கள் ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தர்கள். கௌரவர்களால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அடக்குமுறையால், பாண்டவர்களின் துயரங்கள் தாங்க முடியாத அளவுக்கு வரம்பு மீறியதால் இருதரப்புக்கும் இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டது. போரின் தவிர்க்க முடியாத தன்மையை உணர்ந்து, இரு தரப்பினரும் அந்த நேரத்தில் பாரதத்தின் (இந்தியாவின்) பல ராஜ்யங்களின் ஆதரவிற்காக பிரச்சாரம் செய்தனர். இரண்டு படைகளும் மிகவும் வலிமை வாய்ந்தவையாக இருந்ததால் போரின் விளைவுகள் பாரதம் முழுவதையும் பாதிக்கும். இதனால், நாட்டில் உள்ள அனைத்து அரசர்களும் ஒரு பக்கம் அல்லது மற்றொரு பக்கம் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தீவிரமான அணிதிரட்டல் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அர்ஜுனன் மற்றும் துரியோதனன் இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியைக் கோருவதற்காக துவாரகையை அடைந்தனர். எல்லாம் அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், அவர்கள் தனது உதவியை நாடுகிறார்கள் என்பதை அறிந்திருந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் நெருங்கி வரும் போருக்கான உபதேச தொனியை அமைக்கும் சூழ்நிலையை உருவாக்கினார்.

அவர் தனது அறையில் தூங்குவது போல் பாவித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அர்ஜுனன் அறைக்குள் நுழைந்து, பணிவான மனநிலையில், ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களுக்கு அருகில் அமர்ந்து, அவர் உறக்கத்திலிருந்து விழிப்பதற்காகக் காத்திருந்தார். இதற்கிடையில், துரியோதனனும் வந்து அவனுடைய குணாதிசயமான ஆணவத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரின் தலைக்குப்பின்னால் ஒரு நாற்காலியில் அமர்ந்தான். ஸ்ரீ கிருஷ்ணர் எழுந்ததும், அவரது கண்கள் முதலில் அர்ஜுனன் மீது விழுந்தன, பின்னர், துரியோதனன் இருப்பதையும் அவர் அறிந்தார். இரு தரப்பினரும் போரில் அவரது உதவியை நாடினர். அர்ஜுனன் மற்றும் துரியோதனன் இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரின் உறவினர்கள் என்பதால், பாரபட்சமின்றி இரு தரப்பினருக்கும் உதவ விரும்பினார். எனவே, அவர் ஒரு பக்கத்திற்கு துவாரகா ராஜ்ஜியத்தின் பெரும் படையைக் கொடுப்பதற்கும் மறு பக்கத்திற்கு ஆயுதங்கள் ஏதுமின்றி அவர்களுடன் போரில். பங்கேற்கவும் ஒப்புக்கொண்டார்.. ஸ்ரீ கிருஷ்ணர் கண்விழித்ததும் அர்ஜுனனை முதலில் பார்த்ததால் அர்ஜுனனுக்கு துவாரகா ராஜ்யத்தின் பெரும்படையை கொடுப்பதாக கூறினார். அர்ஜுனன் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும், ஸ்ரீ கிருஷ்ணரைத் தன் பக்கத்தில் வைத்திருக்கத் தேர்ந்தெடுத்தார். கடவுள் தன்னுடன் இருந்தால், அவர் ஒருபோதும் இழக்க முடியாது என்று அவர் முடிவு செய்தார். ராணுவ வலிமையை அடிப்படையாகக் கொண்ட பொருள் வலிமையை மட்டுமே நம்பின துரியோதனன் அர்ஜுனனின் தேர்ந்தெடுப்பில் மகிழ்ச்சி அடைந்தான். ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு போரில் அர்ஜுனனின் தேரோட்டியானார்.

போரின் விளிம்பில், குருஷேத்திர போர்க்களத்தில் இருபுறமும் பெரும் படைகள் குவிந்திருந்தன. வரவிருந்த மாபெரும் போரான மகாபாரதப்போரில் ஒரு ஸகாப்தம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள இருந்ததால் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. போர் துவங்குவதற்கு சற்று முன்பு, அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை இரு படைகளுக்கும் இடையே தனது தேரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். போரில் அணிவகுத்து நிற்கும் வீரர்களை கண்ட அர்ஜுனன் மனம் தளர்ந்து. விரக்தியில், தனது வில்லை கீழே எறிந்து, போரிட மறுத்துவிட்டார்.

அர்ஜுனன் தார்மீக முரண்பாட்டால் பாதிக்கப்பட்டவர். ஒருபுறம், அவர் தனது பாட்டனார் பீஷ்மர், அவரது ஆசிரியர் துரோணாச்சாரியார் போன்ற அவரது மரியாதைக்கும் வணக்கத்திற்கும் தகுதியான மகத்தான போர் வீரர்களை எதிர்கொண்டார். மறுபுறம், ஒரு போர் வீரனாக நீதியின் போரில் போராடுவது அவரது கடமையாக இருந்தது. இருப்பினும் வெற்றியின் எந்தப் பலனும் அத்தகைய கொடூரமான செயலை நியாயப்படுத்துவதாகத் தெரியவில்லை. இது ஒரு தீர்வுக்கு அப்பாற்பட்ட குழப்பமாக தோன்றியது. குழப்பமடைந்த, மனச்சோர்வடைந்த, வாழ்க்கையில் ஏமாற்றமடைந்த, அர்ஜுனன், ஒப்புயர்வற்ற இறைவனிடம் சரணடைந்து, தனக்கான சரியான நடவடிக்கை என்ன என்பதை வழிகாட்டுமாறு வேண்டிக்கொண்டார். அர்ஜுனனின் தார்மீகக் குழப்பத்தின் இந்த நிலையில், ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு அறிவூட்ட முற்பட்டார்.

நிகழ்வுகளின் வரலாற்றுத்தன்மை

மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்களின் வரலாற்றுத் துல்லியம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கிறிஸ்துவின் வரலாற்றுத்தன்மை மற்றும் பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள அவரது வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து ஐரோப்பாவில் இதே போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன. அத்தகைய விவாதம் வரலாற்றாசிரியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம், ஆனால் ஆன்மீகக்கண்ணோட்டத்தில் இது முக்கியமல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய போதனைகளிலிருந்து நாம் பயனடைந்து, அவருடைய அறிவுறுத்தல்களின்படி புனிதமான வாழ்க்கையை வாழ முடிகின்ற பட்சத்தில், இயேசு உண்மையில் நாசரேத்தில் பிறந்தாரா அல்லது பெத்லகேமில் பிறந்தாரா என்பது உண்மையில் முக்கியமில்லை. அவ்வாறே, கீதையின் சிந்தனையின் இன்றியமையாத பொருளை தேடும் பொழுது, வரலாற்றின் விவரங்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை, ஆனால் அது அளித்த ஆன்மீகக்கொள்கைகள் மற்றும் அறிவொளியின் பாதையில் நடப்பதில் அவற்றின் பயனைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டும். ஒரு கல் தெய்வத்தின் மீது தெய்வீக உணர்வுகளைப் பேணினாலும், நம் மனதை தூய்மையாக்கும். அப்படியானால், கடவுளின் லீலைகளை தெய்வீக உணர்வுகளுடன் சிந்திப்பதன் தூய்மையான விளைவைப் பற்றிய சந்தேகம் எங்கே?

நான் பகவத் கீதைக்கு வர்ணனை எழுத உள்ளேன் என்று பக்தர்களிடம் கூறிய பொழுது, மேலை நாடுகளில் சிலர் நான் மகாபாரதத்திற்கு ஒரு உருவக விளக்கம் செய்து, அதற்கேற்ப கீதையை விளக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். என்னிடம் முழு சூழ்நிலையையும் ஒரு உருவகமாக விளக்குகின்ற மேற்கில் பிரபலமான பல வர்ணனைகளை அவர்கள் குறிப்பிட்டனர். இப்படி ஒரு உருவக விளக்கத்தை உருவாக்குவது மிக எளிதான விஷயம், ஆனால் அத்தகைய அணுகுமுறையின் சிக்கல் என்னவென்றால், அது மகாபாரதம் நம் முன்வைக்கும் பக்தியின் அழகான அடிப்படையை அழித்து, வெறுமையான அறிவுசார் பகுப்பாய்வு நிலைக்கு தாழ்த்துகிறது. இது வயலில் ஏற்கனவே வளர்ந்து வரும் அற்புதமான பூந்தோட்டத்தைப் பற்றி அறியாமல், விவசாய சாகுபடிக்கு நிலத்தை மட்டமாக்க நிலச்சமன் செய்பொறியை செலுத்த உத்தரவிடுவது போன்றது. அவ்வாறே, வேத வியாஸரின் இந்த நூல்களை வெளிப்படுத்தியதன் நோக்கம், தெய்வீக அறிவின் பொக்கிஷங்களை நமக்கு வழங்குவது மட்டுமல்லாமல், பரமாத்மாவிடம் மனதை இணைப்பதற்கான அடிப்படையான கடவுளின் இனிமையான பெயர்கள், வடிவங்கள், நற்குணங்கள், பொழுது போக்குகள் மற்றும் தங்குமிடங்களை வாசகருக்கு வழங்குவதாகும்.

எனவே, எல்லாவற்றையும் சுருக்கிச் செல்லும் உயிரற்ற உருவக விளக்கங்களின் மருட்சிக்கு நாம் அடிபணிய வேண்டாம். பகவத் கீதை ஏற்கனவே அதன் அசல் வடிவத்தில் புத்திக்கு ஏராளமான ஊட்டச்சத்தை அளிக்கும் அளவிட முடியாத ஆழமான அறிவைக்கொண்டுள்ளது, இது வர்ணனையாளர்களின் பகவத் கீதையின் வெறுமையான அறிவாற்றலை ஒரு தேவையற்ற முயற்சியாக ஆக்குகிறது. உருவக விளக்கங்ககளை ஒரு இலக்கிய கருவியாக அறிந்திருந்த வேத வியாஸரும் தனது எழுத்துக்களில் அதை திறம்பட பயன்படுத்தினார். எனவே, நம்மை மனம் மற்றும் இதயம் இரண்டின் ஒரு பயணத்தில் அழைத்துச் செல்கின்ற வேத வியாஸ முனிவரை தனது சொந்த உருவகங்களை தேவையான இடங்களில் வெளிப்படுத்த அனுமதிப்போம், மேலும் அவர் ஒப்புயர்வற்ற இறைவன் மனித உருவில் பூமியில் அவதரித்பொழுது மேற்கொண்ட லீலைகளையும் அறிவுரை கூறுகளையும் விவரிக்கிறார்.

கீதையின் மொழி

பகவத் கீதை இந்தியாவின் வரலாற்று மொழியான ஸமஸ்கிருதத்தில் பதிவு செய்யப்பட்டு நமக்கு வழங்கப்பட்டது. ஸமஸ்கிருதம் படிப்படியாக விரிவடைந்த சொற்களஞ்சியத்தைக்- கொண்டிருப்பதால் ஆன்மிகக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு இது மிகவும் பொருத்தமானது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகின் அனைத்து மொழிகளிலும் குறைபாடற்ற மாறாமல் இருக்கும் இலக்கணத்தைக் கொண்டுள்ளது. சமீபத்தில், நாசா விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவுக்கான கணினி மொழியை உருவாக்கி, ஸமஸ்கிருதத்தில் அதற்கான சரியான கணினி-இணக்க இலக்கணம் இருப்பதைக் கண்டு வியந்தனர். நாசா அமெஸ் ஆராய்ச்சி மையம் கலிபோர்னியா, அமெரிக்காவில் உள்ள ரிக் பிரிக்ஸ், தனது ஆய்வறிக்கை ‘சமஸ்கிருதம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அறிவுப் பிரதிநிதித்துவம் (தி AI இதழ், 1985#39) இதழில் ஸமஸ்கிருத மொழியானது தோராயமாக 1,000 ஆண்டுகளாக அதன் சொந்த கணிசமான இலக்கியத்துடன் வழக்காற்றில் இருந்த பேச்சு மொழியாக இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இலக்கிய மதிப்புள்ள படைப்புகளைத் தவிர, ஒரு நீண்ட தத்துவ, மற்றும் இலக்கண பாரம்பரியம் இருந்தது, இது தற்போதைய நூற்றாண்டு வரை குறையாத வீரியத்துடன் தொடர்ந்து இருந்து வருகிறது. இலக்கண வல்லுனர்களின் சாதனைகளில், ஸமஸ்கிருத சாராம்சத்தை வழங்கியது மட்டுமின்றி, அதை தற்போதைய செயற்கை நுண்ணறிவுடன் ஒப்பான வேலைக்கும் கணக்கிடலாம்.

பகவத் கீதையின் ஊடகமாக, ஸமஸ்கிருத மொழி ஆழம், மற்றும் நுட்பம் இரண்டையும் வழங்குகிறது. அதே நேரத்தில் இது நெகிழ்வான மொழி மட்டுமல்லாமல். மற்ற அனைத்து மரபுகளுக்கும் தெய்வீக உரையாடலில் அவர்களின் முன்னோக்கைக் காணும் வாய்ப்பை வழங்குகிறது,

கீதையின் உலகளாவிய புகழ்

சங்கராச்சாரியார் காலத்திலிருந்தே, சிறந்த தத்துவஞானிகள் பகவத் கீதைக்கு தங்கள் விளக்கங்களை எழுதுவதை வழக்கமாகக்கொண்டிருந்தனர், மேலும் இது சமஸ்கிருத மொழியிலிருந்து மற்ற பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அத்தகைய ஒன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் மராத்தி மொழியில் புனித ஞானேஸ்வரரால் எழுதப்பட்ட ஞானேஸ்வரி எனும் விளக்கம். பிரித்தானிய ஆட்சியின் போது, கீதையின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. கிழக்கிந்திய கம்பெனியின் வணிகரான சார்லஸ் வில்கின்ஸ் என்பவரால் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. நியூ இங்கிலாந்தில் உள்ள சுயாதீன சிந்தனையாளர்களின் குழுவான அமெரிக்க டிரான்ஸ்சென்டெண்டலிஸ்டுகள் மீது அவரது உரை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இது ரால்ஃ ப் வால்டோ எமர்சன் ப்ரஹ்மா கவிதையின் அடிப்படையாகியது. எமர்சன் சுவிசேஷ கிறித்துவத்தை எதிர்த்த அனைவருக்கும் கீதையை படிக்கும்படி செய்தார். அவரது நண்பர் ஹென்றி டேவிட் தோரோ இதன் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்தார். மற்றும் அவர் கீதையின் கர்மயோகம் பற்றிய போதனைகளை தனது சொந்த வாழ்க்கை முறை மற்றும் தத்துவத்தில் இணைத்துக்கொண்டார். அதனால், முதல் முறையாக அது எதிர் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, டி.எஸ். எலியட் இந்தியத் தத்துவத்தில் வாழ்நாள் முழுவதும் ஆர்வம் கொண்டிருந்தார் மற்றும் அதை தனது கவிதைகளில் இணைத்தார். கீதை ஜெர்மன் ரொமான்டிக்ஸ், குறிப்பாக ஸ்க்லெகல், ஹம்போல்ட் மற்றும் கோதே ஆகியோரையும் கவர்ந்தது.

இந்தியாவில் தாயகம் திரும்பி, தேசத்தின் மரியாதையை வென்ற சுதந்திர இயக்கத்தின் தலைவர்கள், பகவத் கீதைக்கு தங்கள் உத்வேகத்தின் மூலத்தை காரணம் காட்டத் தொடங்கினர். மகாத்மா காந்திக்கு முன் சுதந்திரப் போராட்டத்தின் தலைவரும், மரியாதைக்குரிய கர்ம யோகியுமான பாலகங்காதர திலகர், கீதைக்கு விரிவான மற்றும் அறிவார்ந்த விளக்கத்தை எழுதினார். அவருக்குப் பிறகு, மகாத்மா காந்தி ஏமாற்றங்களைச் சந்திக்கும் போதெல்லாம், வழிகாட்டுதலுக்காகவும், ஆறுதலுக்காகவும் கீதையின் பக்கம் திரும்புவதாக அறிவித்தார். காந்தியின் சிந்தனை மேற்கில் இருபதாம் நூற்றாண்டின் மற்ற இரு மாபெரும் சமூக உரிமை ஆர்வலர்கள் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு உத்வேகம் அளித்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நடந்த இந்தக் கருத்துக்களின் குறுக்கு விதைப்பு கீதையின் பிரபலத்தை மேலும் மேம்படுத்தியது. 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவை எதிர் கலாச்சாரத்தின் மற்றொரு அலை சுழற்றியது. மேற்கத்திய உலகிற்கு விஜயம் செய்த ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் ஸ்வாமி யோகானந்தரின் பாரம்பரியத்தை தொடர்ந்து, சுவாமி விஷ்ணுதேவானந்தா, ஸ்வாமி சச்சிதானந்தா மற்றும் ஸ்வாமி பிரபுபாதா போன்ற பல இந்திய தருமோபதேசகர்கள் அமெரிக்காவிற்கு வரத்தொடங்கினர். அவர்கள் அனைவரும் கீதையை தங்கள் போதனைகளுக்கான அதிகாரப்பூர்வ குறிப்பீடு என்று குறிப்பிட்டனர். இதன் விளைவாக, பகவத் கீதை மனிதகுல வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் நன்கு படிக்கப்பட்ட ஞான நூல்களில் ஒன்றாக இன்றுள்ள நிலையை விரைவாக அடைந்தது.

 

இதன் போதனைகள் வழிபாட்டு மரபு மற்றும் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை

சமயக்கொள்கை, வழிபாட்டு மரபு, அல்லது மதத்தை பரப்பும் ஒரு வகையான போதனை உள்ளது. மற்றொரு வகையான போதனை எல்லா வழிபாட்டு முறைகளுக்கும் சமயங்களுக்கும் மேலான இலட்சியங்களையும் வாழ்க்கைக் கொள்கைகளையும் பரப்புகிறது. கீதையை சில குறிப்பிட்ட மத அமைப்பின் பலனாகக் கருதும் அறிஞர்கள் அதன் செய்தியின் உலகளாவிய தன்மைக்கு அநீதி இழைக்கின்றனர். அது முன்வைக்கும் கருத்துக்கள் ஒரு தத்துவ புத்தியின் ஊகங்கள் அல்ல, அல்ல; மாறாக, , அவை நம் சொந்த இருப்பில் சான்றாதாரங்களை காட்டத்தக்க மற்றும் நம் வாழ்க்கையில் தங்கியிருக்கும் ஆன்மீக யதார்த்தங்ளின் நீடித்த உண்மைகளாகும். இவ்வாறு, கீதையின் முதல் ஆங்கிலப் பதிப்பு வெளியான பொழுது, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் தனது முன்னுரையில் எழுதினார்: ‘இந்தியாவின் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் நீண்ட காலமாக இல்லாமல் போகும் பொழுது, அல்லது செல்வத்தையும் அதிகாரத்தையும் அளித்த ஆதாரங்கள் நினைவுக்கு வராமல் போகும் பொழுது இவை உயிர்வாழும்.’

எனவே, கீதையைப் படிப்பதில் நமது அணுகுமுறை, அதன் செய்தியை அறிவார்ந்த. அல்லது கல்விசார் ஆய்வு, அல்லது அதன் தத்துவத்தை விவாதப் பள்ளிகளின் பின்னணியில் வைக்கும் முயற்சியாக இருக்கக்கூடாது. பகவத்கீதையின் பக்கங்களில் மனோதத்துவ கருத்துக்கள் ஏராளமாக இருந்தாலும் அது மனோ தத்துவத்தின் ஒரு ஆய்வுக்கட்டுரை அல்ல. மாறாக, அது அறிவார்ந்த அல்லது ஆன்மீக திருப்திக்காக அல்லமல் நமது தற்போதைய மாளுந் தன்மையுடைய அழியும் பாதையிலிருந்து அழியாத பரிபூரணத்திற்கான பாதையை திறக்கும் நடைமுறை பயன்பாட்டின் உயர்ந்த உண்மையைத் தேடுகிறது. ஆகவே, நாம் கீதையை உயர்ந்த நலன் மற்றும் ஆன்மீக பரிபூரணத்தை அடையக்கூடிய வாழ்க்கைச் செய்தியைப் பெறுவதற்கான உதவி மற்றும் ஒளிக்காக அணுக வேண்டும்.

கீதையின் வர்ணனைகள்

தெய்வீக அறிவு புத்தகங்கள் இயற்கையாகவே பல வர்ணனைகளை எழுத ஈர்க்கின்றன. இந்த வர்ணனைகள் அவை கொண்டிருக்கும் நித்திய ஆணைகளை தெளிவுபடுத்த உதவுகின்றன. உலகின் வெவ்வேறு நாடுகளுக்கு அரசியல் சாசனம் போன்ற சட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், இந்தப் புத்தகங்களைப் படிக்க உதவும் வழக்கறிஞர்களால் வெளியிடப்பட்ட வர்ணனைகளும் உள்ளன. அவ்வாறே, இந்த புனித நூல்களில் பொதிந்துள்ள அறிவின் இரத்தினங்களை வெளிப்படுத்துவதற்கு வேதங்களின் வர்ணனைகள் உதவுகின்றன. அதன் பரந்த புகழ் காரணமாக, பகவத்கீதைக்கு நூற்றுக்கணக்கான விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. வரலாற்றில் முக்கியமான வர்ணனையாளர்களில், பெரும் பயன் விளைவிக்கிற வேத மரபுகளை நிறுவிய சிலர் முறையே, ஜகத்குரு சங்கராச்சாரியார், ஜகத்குரு ராமானுஜாச்சாரியார், ஜகத்குரு மத்வாச்சாரியார், ஜகத்குரு நிம்பர்காச்சாரியார் மற்றும் மஹாபிரபு வல்லபாச்சாரியார்.

தெய்வீக அறிவின் அழகு என்னவென்றால், அது எவ்வளவு அதிகமாகக்கடையப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக அது அமிர்தத்தை உற்பத்தி செய்கிறது, எனவே சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நுண்ணறி வர்ணனைகளால் உலகம் வளப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெரிய போப்பாண்டவர்களுடைய வர்ணனைகள் அவரவர் வாழ்க்கை பணிகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த பெரும் ஆச்சார்யர்கள் எப்பொழுதும் மனிதகுலத்தின் நல்வாழ்வை நோக்கமாகக் கொண்டு காலம், இடம், மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப முழுமையான உண்மையை போதித்தார்கள். இவ்வாறு, அவர்கள் தங்களுக்கு பிடித்தமான கருத்துக்களை பரப்புவதற்கும், பகவத்கீதையின் அனைத்து வசனங்களிலும் தங்களுக்குரிய கண்ணோட்டங்களைச் சித்தரிப்பதற்கும் மதப் பிரசாரகர்கள் வைராக்கியத்தைக் கடைப்பிடித்தனர்.

 அவர்களின் தேர்ச்சியடைந்த படைப்புகளுக்கு முழு மரியாதை அளிக்கும் அதே வேளையில், ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு அத்வைத (இருமை அல்லாத) வாதியோ, விஶிஷ்ட அத்வைத (தகுதிவாய்ந்த இருமை அல்லாத) வாதியோ, த்வைத(இருமை) வாதியோ அல்லது த்வைதஅத்வைத (இருமை இருமை அல்லாத) வாதியோ அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அவரும் அவருடைய விடுகையும் தத்துவவாதிகளின் விவாதங்களுக்கு அப்பாற்பட்டவை. இவ்வாறு, இறையச்சம், துறவு, இருமை, கர்மம், ஞானம், நடைமுறைவாதம், பக்தி, ஹட, ஸாங்கியம் போன்ற கொள்கைகள் அனைத்தும் அவருடைய போதனைகளில் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கிறோம். எனவே, பகவத் கீதையின் கருத்தை ஒரு தத்துவ மரபின் கண்ணோட்டத்தில் மட்டுப்படுத்துவதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அதற்குப் பதிலாக முழு பூரணமான உண்மைக்கான சாளரமாக அதைப் பார்க்க வேண்டும்.

இதுவே ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜின் சிந்தனை முறையும் ஆகும். அவர் எந்த ஒரு சம்பிரதாயம் (மத பாரம்பரியம்) அல்லது பாரம்பரியம் (சிஷ்ய வாரிசு) ஆகியவற்றில் சிக்கிக்- கொள்ளாமல், அனைத்து புகழ்பெற்ற இந்திய துறவிகள் மற்றும் மேற்கத்தியர்களின் ஞானப்- படைப்புகளிலிருந்து சரளமாக மேற்கோள் காட்டுகிறார். எந்தவொரு குறிப்பிட்ட சம்பிரதாயத்திற்கும் தன்னைக் கட்டுப்படுத்தாத அவரை நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களில் எதைச் சேர்ந்தவர் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, எந்த ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயத்திற்கும் கட்டுப்படுத்தாத பூரணமான உண்மை ஒன்றே, என்று பணிவுடன் சுட்டிக்காட்டுகிறார். அனைத்து மெய்யான சம்பிரதாயங்களும் கடவுளிடமிருந்து துவங்கியவை. கடவுளின் சம்பிரதாயம் என்ற ஒரே ஒரு சம்பிரதாயம் இருந்தால், அவற்றை நாம் ஏன் நான்காகப் பிரிக்க வேண்டும்? மேலும், சத்தியத்தை இப்படிப் பிரித்துக் காட்டினால், சம்பிரதாயங்களுக்கு நேர்ந்துள்ள பிரிவுகள் பெருகிக்கொண்டே இருக்கும். இதுவே சம்பிரதாயங்களுக்கு நேர்ந்துள்ளது. ஏனெனில், நான்கு மூலங்களில் ஒவ்வொன்றும் மேலும் கிளைகளாகவும் துணைக் கிளைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பூரணமான உண்மை முழுவதிலும் தனி உரிமையைக் கோருகின்றன. இந்தப் போக்கு ஒரு னாதன (நித்திய) தர்மத்தை பல சம்பிரதாயத் துண்டுகளாகப் பிரித்துள்ளது.

உலகில் எல்லைகளை கடந்து, மக்களிடையே தகவல் ஓட்டம் அதிகரிக்கும் பொழுது, ஒரு முறைப்பட்ட சமயக் கோட்பாடு, இனம், பிரிவு, அல்லது மதம் மட்டுமே உலகளாவிய உண்மையின் ஒரே பாதுகாவலர் என்ற எண்ணம் அரிதாகிறது. அறிவின் பரந்த மனப்பான்மையின் இந்த எழுச்சியுடன் நம்மை இணைத்துக்கொள்வோம். மேலும் பகவத் கீதையிலிருந்து பிரகாசிக்கும் பிரிக்க முடியாத, கறைபடாத, பூரணமான அறிவின் உண்மையை ஒளிரச்செய்வோம்..

ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் பற்றி

ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் ஒரு அவதரித்த மஹான் ஆவார், அவர் நவீன காலத்தில் பண்டைய வேத அறிவை மீண்டும் நிலை நாட்டியுள்ளார். தனது 34-வது வயதில், புனித நகரமான காசியில் 500 வேத பண்டிதர்களின் உன்னத அமைப்பான காசி வித்வத் பரிஷத்தின் முன், நூற்றுக்கணக்கான வேத ஶாஸ்திரங்களை மேற்கோள் காட்டி, பத்து நாட்கள் அதிநவீன ஸமஸ்கிருதத்தில் சொற்பொழிவாற்றினார். இந்த சொற்பொழிவில் தற்போதைய காலத்தில் கடவுள் உணர்தலுக்கான எளிமையான, நேரடியான, பாதையை வெளிப்படுத்தினார். கிருபாலுஜி மஹராஜின் அறிவு அவர்கள் அனைவரின் ஒருங்கிணைந்த அறிவையும் விட ஆழமானது என்பதை மதிப்பிற்குரிய அறிஞர்கள் குழு உணர்ந்த பொழுது, அவர்கள் அவருக்கு ஜகத்குரு அல்லது "உலகின் ஆன்மீக குரு" என்ற பட்டத்தை அளித்தனர். ஜகத்குரு சங்கராச்சாரியார், ஜகத்குரு நிம்பர்காச்சாரியார், ஜகத்குரு ராமானுஜாச்சாரியார் மற்றும் ஜகத்குரு மாதவாச்சார்யார், ஆகியோருக்குப் பிறகு ஜகத்குரு என்ற தனிச்சிறப்பான பட்டத்தைப் பெற்ற இந்திய வரலாற்றில் ஐந்தாவது துறவி ஆனார்.

பண்டைய வேத நூல்கள் பற்றிய அவரது ஆழமான அறிவினால் மிகவும் ஈர்க்கப்பட்ட அறிஞர்கள் அவருக்கு மேலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல பாராட்டுகளைப் பொழிந்தனர்:

ஜகத்குருத்தம்--இந்திய வரலாற்றின் உலகின் ஒப்புயர்வற்ற ஆன்மீக குரு

வேத் மார்க பிரதிஷ்டாபனாச்சார்யா-- வேதங்களால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையான பாதையை நிறுவுபவர்.

நிகில் தர்ன் மன்வயாச்சார்யா-- அனைத்து வேதங்களின் உட்பொருளை சமரம் செய்பவர்.

னாதன் வைதிக் தர்மப்திஷ்டாபனாச்சார்யா-- இந்த உலகில் நித்திய வேத தர்மத்தைதை மீண்டும் நிறுவுபவர்.

த்ஸம்ப்ரதாய பரமாச்சார்யா - ஆன்மீக அறிவின் உண்மையான பாரம்பரியத்தை நிறுவியவர்.

பகவத் கீதையின் இந்த வர்ணனையானது, ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் எனக்கு வெளிப்படுத்தியபடி, அதன் வசனங்களின் நுண்ணறிவுப் புரிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த வர்ணனையின் நோக்கம் விளக்கம் கொடுப்பது அல்ல. மாறாக, ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய வசனங்களின் அர்த்தத்தை விளக்குவதுதான். இந்த நோக்கத்திற்காக, உலகெங்கிலும் உள்ள துறவிகள், புனித ஆளுமைகள் மற்றும் புகழ்பெற்றவர்களின் ஞான புத்தகங்கள் மற்றும் போதனைகளிலிருந்து மேற்கோள் காட்ட நான் தயங்கவில்லை.

மொழிபெயர்ப்பில் உள்ள கட்டுப்பாடுகள்

இந்த தமிழாக்கம் ஸ்வாமி முகுந்தாநந்தா அவர்களின் ஸ்மஸ்கிருத மொழியில் ஆன பகவத் கீதையின் ஆங்கில வர்ணனையை ஆதாரமாகக் கொண்டது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு இடையேயான வாக்கியங்களின் அமைப்பு மற்றும் பொருள் வேறுபாடுகளின் காரணமாக சமன்பாடுகளை கண்டறிவதில் சிரமங்கள் இருப்பினும் ஆங்கில--தமிழ் பகவத்கீதை வர்ணனையின் இந்த தமிழ் மொழியாக்கம் முடிந்தவரை ஆதார ஆங்கில மொழிபெயர்ப்பின் சாரத்தை பராமரிக்க முயற்சி செய்கிறது.

ஆங்கிலத்தில் உள்ள சொற்களை ஸ்மஸ்கிருத சொற்களுடன் பொருந்துமாறு கண்டறிவது எளிதானதல்ல. எந்தவொரு மொழியின் வார்த்தையின் அர்த்தங்களும் அந்த மொழியைப் பேசும் மக்களின் கலாச்சார மற்றும் தத்துவ கட்டமைப்பால் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு, ஸ்மஸ்கிருத வார்த்தைகள் இந்தியாவின் கருத்தியல் சிந்தனை அமைப்பிலிருந்து அவற்றின் அர்த்தங்களைப் பெறுகின்றன. இது, ஆங்கில வார்த்தைகளின் அர்த்தங்களை வடிவமைத்துள்ள மேற்கத்திய சிந்தனை முறையிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருப்பதால், எந்த மொழிபெயர்ப்பிலும் தவிர்க்க முடியாத கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆங்கிலத்தில் உள்ள அனைத்து ஸ்மஸ்கிருத சொற்களும் தோராயமானவை. எடுத்துக்காட்டாக, ப்ரஹ்மன் (உருவமற்ற, பண்புக்கூறு அற்ற, கடவுளின் அனைத்து வியாபிக்கும் அம்சம்) என்பதன் பொருளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் ஆங்கில வார்த்தை எதுவும் இல்லை. தர்மத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் இதே பிரச்சனை பொதுவாக எழுகிறது. நீதியின் பாதை, ஒருவரின் கடமை, அறம், பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் போன்றவை அனைத்தும் அதன் அர்த்தத்தின் மொத்த தோராயமானவை. பொருத்தமான ஆங்கில சொற்றொடர்கள் கிடைக்காத இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும், அசல் ஸ்மஸ்கிருத சொற்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் அடையாளத்திற்காக சாய்வாக எழுதப்பட்டுள்ளன, மேலும் முக்கியமான சொற்கள் புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள சொற்களஞ்சியத்தில் விரிவான விளக்கங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன..

 மேலும் பகவத் கீதையின் 700 ஸமஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழில் ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. தேவநாகரியிலிருந்து தமிழுக்கு ஒலிபெயர்ப்பதில் க, ச ப, ட, த போன்ற ஒவ்வொரு தேவநாகரி மெய் எழுத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற ஒலிகளை வேறுபடுத்துவது தமிழில் மிகவும் கடினமானது. அவற்றின் ஒலிவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிற 1,2,3,4 எண் குறிகள் அவற்றின் சரியான உச்சரிப்பை சித்தரிக்கும் நோக்கத்துடன் ஸ்லோகங்களின் தேவநாகரி-தமிழ் ஒலி பெயர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வர்ணனையில் கொடுக்கப்பட்டுள்ள ஸமஸ்கிருதம், ஹிந்தி, வங்காளம் மற்றும் அவதி4 மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும், மற்றும் பிற வேத நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட வசனங்களுக்கும் அவற்றின் சரியான உச்சரிப்பை சித்தரிக்கும் நோக்கத்துடன் ஒலிவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிற 1,2,3,4 எண் குறிகள் கொடுக்கப்பட்டுள்ளது

பின் இணைப்புகளில் தேவநாகரி-தமிழ் ஒலிபெயர்ப்புக்கான உச்சரிப்பு வழிகாட்டியைக் காணலாம்.

வாசிப்பை எளிதாக்க உதவும் குறிப்புகள்

ஒன்றிரண்டு விஷயங்களைப் புரிந்து கொண்டால் இந்த வர்ணனையை படிப்பது எளிதாக இருக்கும். முதலாவதாக, கீதை என்பது ஒரு உரையாடலுக்குள் ஒரு உரையாடல். பகவத் கீதை மகாபாரதத்தின் பீஷ்ம பர்வத்தில் ஒரு பகுதியாகும். மகாபாரதத்தின் பீஷ்ம பர்வம், வைஸம்பாய முனிவரால் மன்னன் ஜன்மேஜயனுக்கு கூறப்பட்டது. வைஸம்பாயரும் இவ்வாறு ஜன்மேஜயனிடம் கூறுகிறார்: ஞ்ஜய உவாச- ‘சஞ்ஜயன் கூறினார்’, திருதராஷ்டிர உவாச- ‘திரிதராஷ்டிரர் கூறினார,’ முதலியன. இருப்பினும், வைஸம்பாயனும் ஜன்மேஜயனும் பகவத் கீதையில் நேரடியாகப் பேசுவதில்லை.

மன்னர் திருதராஷ்டிரருக்கும் அவரது மந்திரி ஸஞ்ஜயனுக்கும் இடையேயான உரையாடலாக கீதை துவங்குகிறது. திருதராஷ்டிரர் பார்வையற்றவராக இருந்ததால், அவரால் போர்க்களத்தில் தனிப்பட்ட முறையில் இருக்க முடியவில்லை. திருதராஷ்டிரர் ஸஞ்ஜயனிடம் போர்க்களத்தில் நடந்த நிகழ்ச்சிகளைக் பற்றி கேட்டு உரையாடலைத் துவங்குகிறார்; ஸஞ்ஜயன் போர்க்களத்தில் நடந்த சம்பவங்களை அவருக்கு விவரிக்கிறார். திருதராஷ்டிரர் கீதையில் மீண்டும் பேசவில்லை. வேத வியாசரின் சீடரான ஸஞ்ஜயன் அவரது ஆசிரியரின் அருளால் தொலைதூரப் பார்வைக்கான மாயத் திறனைப் பெற்றிருந்தார். இதனால் போர்க்களத்தில் நடந்த நிகழ்வுகளை திருதராஷ்டிரருக்கு நேரடியாக விவரித்தார். ஸஞ்ஜயன் திருதராஷ்டிரருடன் தான் பார்ப்பதையும் கேட்டதையும் தொடர்புபடுத்தி புத்தகம் முழுவதும் அவ்வப்பொழுது விவரிக்கிறார். எனவே, அவர் ஸ்ரீ பகவான் உவாச ‘ஸ்ரீ பகவான் கூறினார்’ மற்றும் அர்ஜுன் உவாசா ’அர்ஜுன் கூறினார்’ போன்ற வரிகளை. கூறுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடலின் பெரும்பகுதியில் அர்ஜுனனின் கேள்விகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பதில் சொல்கிறார். பெரும்பாலான உரையாடலை ஸ்ரீ கிருஷ்ணர் செய்வதால் உரையாடல் ஓரளவு ஒருதலைப்பட்சமாகவே உள்ளது.

இரண்டாவதாக, எபிதெட்ஸ் என்றும் அழைக்கப்படும் நாமங்கள் ஏராளமாக உள்ளன. எடுத்துக்காட்டாக, ஸ்ரீ கிருஷ்ணர் ஹிருஷிகேஷ், கேசவன், கோவிந்தன், அச்சுதன், மதுஸூதனன் போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். அவ்வாறே அர்ஜுனன் தனஞ்சயன், குடாகேஶன், கௌந்தேயன், பரந்தபன், முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இந்த பெயர்கள் உரையாடலுக்கு ஒரு பொருளை அல்லது சுவையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் கருத்தூன்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அத்தகைய சொல்வன்மை தேவைப்படும் போதெல்லாம் வர்ணனையில் விளக்கப்பட்டுள்ளது..

பகவத் கீதையில் உள்ள முக்கியமான சொற்றொகுதி

முழு பகவத் கீதையின் சுருக்கம் இந்த அறிமுகத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது. முதலாவதாக, வாசகர்களின் வாசிப்பின் மகிழ்ச்சி குறைந்துவிடும். இரண்டாவதாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதில் கூறிய அனைத்தையும் சுருக்கமாகக் கூற இயலாது. இருப்பினும், வாசகர்கள் எளிதாக புரிந்து கொள்வதற்கு பகவத்கீதையில் உள்ள சில பொதுவான சொற்கள் மற்றும் வேத இலக்கியத்தின் மற்ற பகுதிகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

கடவுள் (பகவான்): பகவத் கீதை உட்பட வேத ஶாஸ்திரங்களில், கடவுள் என்பது ஒப்புயர்வற்ற மூலப் பொருளைக் குறிக்கிறது. அவரை, எல்லாம் வல்லவராக, எங்கும் நிறைந்தவராக, மற்றும் எல்லாம் அறிந்தவராகவும், படைப்பை உருவாக்கி, பராமரித்து, மற்றும் (ப்1ரளய காலத்தில்) கலைப்பவராகவும் குறிப்பிடுகிறது. அவர் அருகிலும் மற்றும் தொலைவிலும் இருப்பவராகவும், பெரியதாகவும், மற்றும் சிறியதாகவும் உருவமற்ற, மற்றும் உருவம் கொண்ட, குணங்கள் இல்லாத மற்றும் எண்ணற்ற குணங்கள் கொண்ட முரண்பாடான பண்புகளை உடையவர்.

மக்கள் மூன்று வகைகளில் ஒப்புயர்வற்ற மூலப் பொருளை அணுகுகிறார்கள். சிலர் அவரது உருவமற்ற, அனைத்திலும் வியாபித்த ப்ரஹ்மன் என்றழைக்கப்படும் அம்ஸத்தில் தொடர்புற்று இருக்கிறார்கள். பிறர் எல்லா உயிர்களின் இதயங்களிலும் வீற்றிருக்கும் பரமாத்மாவாக அவரை வழிபட விரும்புகிறார்கள். இன்னும் சிலர் அவரை அவரது தனிப்பட்ட வடிவமான பகவானாக வழிபட முற்படுகின்றனர். இந்த மூன்றும் ப்ரஹ்மன், பரமாத்மா, மற்றும் பகவான் ஒரே ஒப்புயர்வற்ற மூலப்பொருளின் வெவ்வேறு அம்சங்கள்.

பகவான் அவரது காரணமற்ற கிருபையால் எப்பொழுதுதாவது அவதாரம் எடுத்து இந்த பூமியில் இறங்கி ஆன்மாக்களை உயர்த்துவதற்கான தெய்வீக பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறார். ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இருவரும் ஸர்வ வல்லமையுள்ள ஒரு வடிவத்திற்கு உட்படுத்தப்படாத ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமையின் அவதாரங்கள்.. தன்னை எண்ணற்ற வடிவங்களில் பிரகடனப்படுத்தும் ஆற்றலைக் கொண்ட தெய்வீகமான இறைவனின் அனைத்து வடிவங்களும் ஒரே தெய்வீக இறைவனின் வெவ்வேறு வடிவங்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆன்மா (ஆத்மா): தனிப்பட்ட ஆன்மா என்பது கடவுளின் ஒரு துகள். ஆன்மீக இயல்புடைய ஆத்மா ஜட உடலிலிருந்து வேறுபட்டது. உணருந்திறமற்ற பொருளால் ஆன உடலுக்கு நனவை அளிக்கும் நித்தியமான ஆன்மா வெளியேறும்போது, அழியக்கூடிய உடல் மீண்டும் உயிரற்ற பொருளாகிறது. பூமியில் ஒரு மனிதனின் ஒவ்வொரு பிறப்பிலும் புதிய ஆன்மாக்கள் உருவாக்கப்படுகின்றன என்ற ஆபிரகாமியக் கருத்தாக்கத்திலிருந்து இது சற்று வித்தியாசமானது.

வேதங்களில் குறிக்கப்படுகிற உணர்தலின் படி தொடக்கமோ முடிவோ இல்லாத ஆன்மாவானது பிறப்பின்போது தோன்றுவதும் இல்லை இறப்பின்போது அழிவதும் இல்லை. உலக பரிபாஷையில் நாம் மரணம் என்று சொல்வது வெறும் உடல்களை மாற்றும் ஆன்மா மட்டுமே. பகவத் கீதை இதை ஒரு நபர் புதிய ஆடைகளை அணிவதற்காக துணிகளை மாற்றுவதற்கு ஒப்பிடுகிறது. ஆன்மாவிற்கு தனது அடுத்த பிறப்பை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் கிடையாது; அது கர்மாவின் சட்டத்தின் அடிப்படையில் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. பொருள் ஆற்றல் நம்மை சூழ்ந்து இருப்பதின் காரணம் நாம் கடவுளை நோக்கி புறமுதுகு காட்டி விட்டதே ஆகும். ஒளியின் இயல்புடைய கடவுளை விட்டு திரும்பியவர் பொருள் ஆற்றலின் இருளால் வெல்லப்படுகிறர். அதுபோலவே, அவரை நோக்கிப் புறமுதுகு காட்டி நிற்கும் ஆன்மாக்கள் பொருள் ஆற்றளால் சூழப்பட்டுள்ளன.

ஆத்மா என்ற சொல்லைப் வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி புரிந்துகொள்வது உதவியாக இருக்கும். உடலமைந்த நிலையில் இருக்கும் ஆத்மா ஜீவாத்1மா என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது உடலை உயிர்ப்புடன் (ஜீவித்) வைத்திருக்கிறது. பொருள் துறையில் ஆத்மா மற்றும் ஜீவாத்மா என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று இடைப்பரிமாற்றமாக பயன்படுத்தப்படுகின்றன. தனிப்பட்ட ஆன்மாவுடன் (ஜீவாத்மா), கடவுளும் உடலுக்குள் அமர்ந்திருக்கிறார்.. அவர் பரமாத்மா (ஒப்புயர்வற்ற ஆன்மா) என்று அழைக்கப்படுகிறார். எண்ணற்ற வாழ் நாட்களாக, ஜீவாத்மா எந்த உடல் வடிவத்திற்குச் செல்கிறதோ, அதனுடன் அவர் செல்கிறார். பரமாத்மா ஜீவராசியின் செயல்களில் குறுக்கிடாமல், மௌன சாட்சியாகவே இருக்கிறார். ஜீவாத்மா தனது நித்திய நண்பனை மறந்து, மாயா சக்தியை அனுபவிக்க போராடுகிறது.

ஆன்மா என்று பொருள்படும் ஆத்மா என்ற சொல் கீதையில் சீராக பல்வேறு பயன்பாடுகளுக்காக எழுகிறது. சில இடங்களில் ஆத்மா என்ற சொல் உடல், மனம், மற்றும் புத்தியை உள்ளடக்காமல் ஜீவாத்மாவை (தனி ஆன்மா) குறிக்கப் பயன்படுகிறது (வசனம் 6.20). சில சமயங்களில், இது ஆன்மா மற்றும் உடல், மனம், புத்தி (வசனம் 6.20) உட்பட உயிரினத்தின் முழு ஆளுமையையும் குறிக்கிறது. எப்பொழுதுதாவது, ஆத்மா என்பது மனதைக் குறிக்கிறது (வசனம் 6.5); ஓரிரு இடங்களில், ஆத்மா புத்தி என்ற சொல்லுக்கு பயன்படுத்தப்படுகிறது (வசனம் 5.7). மேலும் சில இடங்களில், இது பரமாத்மாவிற்குப் பயன்படுத்தப்படுகிறது (ஒப்புயர்வற்ற ஆத்மா,/ கடவுள் -வசனம் 6.29).

பொருள் இயல்பு (ப்ரக்ருதி அல்லது மாயா): ப்ரக்ருதி எனப்படும் மாயை சக்தி கடவுளுக்கு எதிரானது அல்ல; மாறாக அவருடைய எண்ணற்ற சக்திகளில் ஒன்றாகும். கலைக்கப்படும் நேரத்தில் (ப்1ரளய காலத்தில்), கடவுளின் இருப்புக்குள் மறைந்திருக்கும். ப்ரக்ருதியை அவர் உலகைப் படைக்க விரும்பும்போது, அவரது கணநேர பார்வையில் அது அதன் மறைந்த நிலையில் இருந்து விடுபடத் துவங்குகிறது. பின்னர் அது படைப்பின் பல்வேறு முழுமையான மற்றும் நுட்பமான கூறுகளை வெளிப்படுத்துகிறது.

பொருள் ஆற்றலின் ஒரு அம்சமான-- மாயை, உலகத்தை உருவாக்குவதற்குப் பொறுப்பானாலும், அதன் இரண்டாவது அம்சம் ஆன்மாக்களை வாழ்க்கை மற்றும் மரணத்தின் ஸம்ஸாரத்துடன் பிணைக்க உதவுகிறது. மாயை நம்மை நாம் தெய்வீக ஆத்மாக்கள் என்ற அடையாளத்தை மறக்கச் செய்கிறது, மேலும் நம்மை நாம் உடல் என்ற மருட்சியில் மயங்கச்செய்கிறது. எனவே, நாம் உலகில் உடல் இன்பங்களை நாடுகிறோம். எண்ணிலடங்கா ஆயுட்காலம் பொருள் உடலில் பெரு முயற்சியின் பிறகு, ஆன்மா தான் தேடும் எல்லையற்ற தெய்வீக பேரின்பம் உலகத்திலிருந்து அல்லாமல் கடவுள் இருந்து மட்டுமே பெறப்படும் என்பதை உணர்ந்து கொள்கிறது. பின்னர், ஆன்மா முழுமையின் நிலையை அடைய யோகத்தின் வழியைப் பின்பற்ற வேண்டும். ஆன்மா கடவுளுடன் பரிபூரண ஐக்கியத்தை அடையும் பொழுது அது மாயா சக்தியின் ஆற்றலின் பிடியில் இருந்து விடுதலை பெறுகிறது.

இயற்கையின் முறைகள் (குணங்கள்): பொருள் ஆற்றல் மூன்று கூறு முறைகளைக கொண்டுள்ளது: ஸத்வ குணம் (நன்மையின் முறை), ரஜோ குணம் (ஆர்வத்தின் முறை), தமோ குணம் (அறியாமையின் முறை). நம் ஆளுமையில் வெவ்வேறு விகிதங்களில் உள்ளன இந்த குணங்கள் நம்மை பாதிக்கின்றன. அறியாமை முறை சோம்பல், மயக்கம், அறியாமை, கோபம், வன்முறை மற்றும் போதையை தூண்டுகிறது. இதன் மூலம், அது ஆன்மாவை ஜட மாயையின் இருளில் ஆழமாக இழுக்கிறது. பேரார்வ முறையானது மனம் மற்றும் புலன்களின் ஆசைகளைத் தூண்டுகிறது, மேலும் உலக இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக ஒருவரை பேராசையுடன் முயற்சி செய்யத் தூண்டுகிறது. நன்மையின் முறை ஒரு நபரை அறிவுடன் ஒளிரச் செய்கிறது மற்றும் கருணை, பொறுமை, மற்றும் சகிப்புத்தன்மை போன்ற நல்ல பண்புகளை வளர்க்கிறது. இது மனதை அமைதியடையச் செய்து ஆன்மீகப் பயிற்சிக்கு ஏற்றதாக அமைக்கிறது. ஒரு ஸாதக் (ஆன்மீக பயிற்சியாளர்) நன்மையின் முறையை வளர்ப்பதன் மூலம் அறியாமை மற்றும் பேரார்வத்தின் முறைகளைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும், பின்னர், நன்மையின் குணத்தைக்கூட மீற வேண்டும். கடவுள் மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவர்; மனதை அவருடன் இணைத்து நாமும் ஆழ்நிலை தளத்திற்கு முன் நோக்கி செல்லலாம்.

யஞ்ஞம் (தியாகம்): பொதுவாக, யஞ்ஞம் என்பது அக்னி தியாகத்தைக் குறிக்கிறது. பகவத் கீதையில், யஞ்ஞம் என்பது புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பரமாத்மாவிற்கு ப்ரஸாதமாக செய்யப்படும் அனைத்து செயல்களையும் உள்ளடக்கியது,

இயற்கையின் கூறுகள் கடவுளின் படைப்பு அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதிகள். அமைப்பின் அனைத்துப் பகுதிகளும் இயற்கையாகவே முழுமையிலிருந்து பெற்று திரும்ப கொடுக்கின்றன. சூரியன் பூமிக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கிறது. மற்றும் உயிர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான வெப்பத்தையும் ஒளியையும் வழங்குகிறது. பூமி அதன் மண்ணிலிருந்து நமது ஊட்டச்சத்திற்காக உணவை உருவாக்குகிறது. மற்றும் நாகரீக வாழ்க்கைக்குத் தேவையான கனிமங்களை அதன் கருப்பையில் வைத்திருக்கிறது. காற்று நம் உடலில் உள்ள உயிர் சக்தியை நகர்த்துகிறது மற்றும் ஒலி ஆற்றலை கடத்துகிறது. மனிதர்களாகிய நாமும் கடவுளின் படைப்பின் முழு அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறோம். நாம் சுவாசிக்கும் காற்று, நாம் நடக்கும் பூமி, நாம் குடிக்கும் தண்ணீர், மற்றும் நம் நாளை ஒளிரச் செய்யும் ஒளி இவை அனைத்தும் நமக்கு படைப்பின் பரிசுகள். நம் வாழ்க்கையை நிலைநிறுத்த உதவும் இந்த பரிசுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் ஒருங்கிணைந்த அமைப்பிற்கான நமது கடமைகளும் நமக்கு உள்ளன என்பதை மனதில் கொள்ள வேண்டும். பகவத் கீதை, இறைவனின் சேவையில் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் மூலம் இயற்கையின் படைப்பு சக்தியுடன் பங்கேற்க கடமைப்பட்டுள்ளோம் என்று கூறுகிறது. அதுதான் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் யாகம்.

ஒரு கையின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால் இது உடலின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது அதன் ஊட்டச்சத்தை-இரத்தம், ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை உடலில் இருந்து பெறுகிறது, மேலும் அது உடலுக்குத் தேவையான செயல்பாடுகளைச் செய்கிறது. கை இந்தச் சேவையை பாரமாகப் பார்த்து, உடலிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்ள முடிவு செய்தால், கையினால் சில நிமிடங்கள் கூட தனியாக தாக்குப் பிடிக்க முடியாது. உடலுக்கு இந்த சேவையை செய்வதில்தான் கையின் சுயநலமும் நிறைவேறுகிறது. அதேபோன்று, பரமாத்மாவின் சிறிய பகுதிகளான தனிப்பட்ட ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் மேம்பட்ட திட்டங்களில் பங்கு வகிக்கிறோம். நாம் அவரை நோக்கி யாகம் செய்யும் பொழுது, நமது சுயநலம் இயல்பாகவே திருப்தி அடைகிறது.

தியாகம் அல்லது யாகம், தெய்வீக உணர்வில் பரமாத்மாவிற்கு ஒரு காணிக்கையாக செய்யப்பட வேண்டும். இருப்பினும், மக்கள் தங்கள் புரிதலில் வேறுபடுகிறார்கள். எனவே, வேறுபட்ட உணர்வுடன் வெவ்வேறு நடத்தைகளில் தியாகம் செய்கிறார்கள். குறைந்த புரிதல் மற்றும் பொருள் வெகுமதிகளை விரும்பும் நபர்கள், தேவலோக தெய்வங்களுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள்.

தேவர்கள் (தேவலோகதெய்வங்கள்): இவை ஸ்வர்கம் (தேவலோக இருப்பிடங்கள்) என்று அழைக்கப்படும் இந்த உடல் சார்ந்த ஆன்மத்துறை சாராத பொருள்வுலகிற்குள் இருக்கும் உயர்நிலைகளில் வாழும் உயிரினங்கள். இந்த தேவலோக மனிதர்கள் (தேவர்கள்) கடவுள் இல்லை. அவர்களும் நம்மைப் போன்ற ஆத்மாக்கள். அவர்கள் கடவுளின் நிர்வாக அமைப்பில் குறிப்பிட்ட நிலைகளை ஆக்கிரமித்து, பொருள் உலகின் குறிப்பிட்ட அம்சங்களை மேற்பார்வை செய்கிறார்கள்.

ஒரு நாட்டின் கூட்டாட்சி அரசாங்கத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். இந்த அரசாங்கத்தில் மாநிலச் செயலர், நிதிச் செயலர், வணிகச் செயலர், வேளாண்மைச் செயலர், மற்றும் பலர் உள்ளனர். இந்த பதவிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இந்தப் பதவிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆக்கிரமித்து அதன் பதவி காலத்தின் முடிவில் அரசாங்கம் மாறுகிற பொழுது பதவியில் இருப்பவர்கள் அனைவரும் மாறுகிறார்கள். இந்த பதவிகள் மாறுவதில்லை ஆனால் இந்த பதவிகளை வகிக்கும் நபர்கள் மாறுகிறார்கள். இவ்வாறே, உலக விவகாரங்களின் நிர்வாக அமைப்பில், அக்னி தேவன் (அக்கினியின் கடவுள்), வாயு தேவன் (காற்றின் கடவுள்), வருண தேவன் (ஸமுத்திர கடவுள்), இந்திர தேவன் (தேவலோக கடவுள்களின் அரசன்) முதலிய பதவிகள் உள்ளன. கடந்தகால வாழ்க்கையில் தங்கள் செயல்களின் தன்மையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்மாக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த இருக்கைகளை ஆக்கிரமித்து பின்னர் அவர்கள் தங்கள் நிலையிலிருந்து விழுகிறார்கள், மற்றவர்கள் இந்த இருக்கையை ஆக்கிரமிக்கிறார்கள். எனவே, ஆன்மாக்கள் தற்காலிகமாக மட்டுமே பரலோக கடவுள்களாக மாறுகின்ற, இதன் விளைவாக, நாம் அவர்களை ஒப்புயர்வற்ற கடவுளுடன் ஒப்பிட முடியாது.

பல மக்கள் பொருள் வெகுமதிகளுக்காக தேவலோக தேவர்களை வணங்குகிறார்கள். இருப்பினும், இந்த தேவர்களால் பொருள் பந்தத்திலிருந்து விடுதலையையோ அல்லது கடவுள்- உணர்தலையையோ வழங்க முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் பொருள் பலன்களை வழங்குகிறார்கள் என்றால், அது அவர்கள் கடவுளிடமிருந்து பெற்ற சக்திகளால் மட்டுமே. எனவே, பகவத் கீதை தேவலோக தெய்வங்களை வழிபடுவதைத் மீண்டும் மீண்டும் தடை செய்கிறது. மற்றும் அறிவமைதியுடையவர்கள் ஒப்புயர்வற்ற இறைவனை வணங்குவதாகக் கூறுகிறது.

கடவுளின் தெய்வீக இருப்பிடம்: அனைத்து தேவலோக வசிப்பிடங்கள், பூமி கிரகம், இருப்பின் நரக பரிமாணங்கள் மற்றும் இந்த பொருள் மண்டலம் உட்பட அனைத்தும் கடவுளின் முழு படைப்பில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே. இது இன்னும் தவறற்ற ஆன்மீக நிலையை அடையாத ஆத்மாக்களுக்கானது. இங்கு பிறப்பு, நோய், முதுமை, இறப்பு எனப் பலவிதமான துன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த முழுப் பொருள் சாம்ராஜ்யத்துக்கும் அப்பால், கடவுளின் படைப்பில் நான்கில் மூன்று பங்கு அடங்கிய ஆன்மீகப் பரிமாணம் உள்ளது. வேத இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கோலோகம் (கிருஷ்ணரின் இருப்பிடம்) வைகுண்டம் (நாராயணனின் இருப்பிடம்) சிவலோகம் (சிவபெருமானின் இருப்பிடம்) தேவிலோகம் (அன்னை துர்காவின் இருப்பிடம்) போன்ற எண்ணற்ற கடவுளின் வாசஸ்தலங்கள் இதில் உள்ளன. பகவத் கீதை மீண்டும் மீண்டும் கடவுள்-உணர்தலை அடைந்த ஒருவர் கடவுளின் தெய்வீக இருப்பிடங்களுக்குச் செல்கிறார். மற்றும் ஜட உலகில் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சிக்கு திரும்ப மாட்டார் என்று குறிப்பிடுகிறது

ரணாகதி (சரணடைதல்): கடவுள் .தெய்வீகமானவர், நமது பொருள் நுண்ணறிவால் அவரை புரிந்து கொள்ள முடியாது. அதுபோலவே, பொருள் ஆற்றலால் சூழப்பட்ட நமது புலன்களால் அவரை உணரவோ, கண்களால் பார்க்கவோ, காதுகளால் கேட்கவோ முடியாது. இருப்பினும், அவர் தனது கருணையை சில உயிரினங்களுக்கு வழங்க முடிவு செய்தால், அவர் தனது தெய்வீக ஆற்றலை அந்த நற்பேறுடைய ஆத்மாவிற்கு வழங்குகிறார். அவருடைய தெய்வீக அருளைப் பெற்றால் அவரைக் காணலாம், அவரை அறியலாம், அவரை அடையலாம். கடவுளின் இந்த அருள் அவரது ஒரு விசித்திரமான செயல் அல்ல. தம்மிடம் சரணடைந்தவர்களுக்கு அவர் தனது தெய்வீக அருளை வழங்குகிறார். எனவே, பரமாத்மாவிடம் சரணடைவதன் ரகசியத்தை ஆத்மா கற்றுக் கொள்ள வேண்டும் என்று பகவத் கீதை வலியுறுத்துகிறது.

.

யோக்: யோக் என்ற சொல் கீதையில் தோராயமாக நூற்றி ஐம்பது இடங்களில், பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.. இது யுஜ் என்ற மூலத்திலிருந்து உருவாகிறது, அதாவது ‘ஒன்றுபடுதல்.’ ஆன்மீகக் கண்ணோட்டத்தில், கடவுளுடன் தனிப்பட்ட ஆன்மா ஒன்றிணைவது யோகம் என்று அழைக்கப்படுகிறது (வசனம் 5.21). இருப்பினும், அந்த ஒன்றிணைப்பை நிறைவேற்றும் விஞ்ஞானம் யோகம் என்றும் அழைக்கப்படுகிறது (வசனம் 4.1). மீண்டும், செயல்முறை மூலம் அடையப்பட்ட தவறற்ற நிலை யோக் என்றும் குறிப்பிடப்படுகிறது (வசனம் 6.18). கடவுளுடன் இணைந்திருப்பது இயற்கையாகவே ஒருவரை ஜட இயற்கையுடனான தொடர்பால் விளையும் துன்பத்திலிருந்து விடுவிக்கிறது. எனவே, துன்பத்திலிருந்து விடுபடும் நிலை யோகம் என்றும் குறிப்பிடப்படுகிறது (வசனம் 6.23). முழுமையும் மனதின் சமநிலையுடன் இருப்பதால், அத்தகைய சமநிலையும் யோகம் என்றும் அழைக்கப்படுகிறது (வசனம் 2.48). யோக நிலையில் இருப்பவர், கடவுள் பக்தி உணர்வுடன் அனைத்துச் செயல்களையும் மிகச்சரியாகச் செய்கிறார், எனவே பணியில் உள்ள திறமையும் யோகம் என்றும் குறிப்பிடப்படுகிறது (வசனம் 2.50). 

.

யோகம் ஏன் அவசியம் என்று ஒருவர் கேட்கலாம். பொருள் உலகில் மகிழ்ச்சியைத் தேடுவது பாலைவனத்தில் கானல் நீரை துரத்துவது போன்றது என்பதே பதில். பொருள் உலக ஆசைகளின் தன்மை, அவற்றை நிறைவேற்றுவது, எண்ணெய் ஊற்றி நெருப்பை அணைப்பதற்கு ஒப்பாகும். ஒரு கணம் நெருப்பு அடக்கப்பட்டு மறுகணம் இன்னும் அதிக தீவிரத்துடன் எரிகிறது. அவ்வாறே, மனம் மற்றும் புலன்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது பேராசைக்கு வழிவகுக்கிறது. ஆனால் அவற்றைத் தடுப்பதும் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அது கோபத்திற்கு வழிவகுக்கிறது. ஆசைகள் ஏன் எழுகின்றன என்பதற்கான அடிப்படைக் காரணத்தை நாம் புரிந்துகொண்டு அதைத் தீர்க்க முயல வேண்டும்.

இது அனைத்தும் ஒரு நபரிலோ அல்லது பொருளிலோ மகிழ்ச்சி இருப்பதாக நாம் சிந்திக்கும் பொழுது துவங்குகிறது. திரும்பத் திரும்ப சிந்திப்பது மனதின் பற்றுதலை உண்டாக்குகிறது, மேலும் பற்றுதல் ஆசையை உண்டாக்குகிறது. ஆன்மா தேடும் தெய்வீக ஆனந்தம் ஜடப் பொருட்களில் இல்லை என்று உறுதியாக முடிவு செய்தால், இந்த ஆசைகள் எழுவது நின்றுவிடும். இருப்பினும், மகிழ்ச்சிக்கான ஆசை ஆன்மாவின் இயல்பில் உள்ளார்ந்ததாக இருக்கிறது, ஏனென்றால் அது தெய்வீக பேரின்பத்தின் எல்லையற்ற கடலின் ஒரு சிறிய பகுதியாகும். ஆன்மா கடவுளின் எல்லையற்ற பேரின்பத்தை அடையும்போது மட்டுமே இந்த இயல்பு திருப்தி அடையும். எனவே, தெரிந்தோ தெரியாமலோ, ஒவ்வொரு ஆத்மாவும் அந்த தெய்வீக உணர்வு அல்லது யோக நிலையை அடைய போராடிக் கொண்டிருக்கிறது.

கர்மயோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம், மற்றும் பக்தி யோகம் போன்ற யோகத்தின் வெவ்வேறு அமைப்புகள் கடவுளுடன் ஐக்கியத்தை அடைவதற்கான பல்வேறு பாதைகளாக குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு ஆன்மீக பயிற்சியாளர்கள் பொதுவாக யோகிகள் (வசனம் 4.25) அல்லது ஸாதகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எப்பொழுதாவது, யோக் என்ற சொல் குறிப்பாக அஷ்டாங்க-யோக செயல்முறையைக் குறிக்கிறது (வசனம் 4.28). இதுபோன்ற சந்தர்ப்பங்களில், யோகி குறிப்பாக அஷ்டாங்க-யோக பயிற்சியாளரைக் குறிக்கிறது.

ஞான யோகம் (அறிவின் பாதை): யோகத்தின் இந்த அமைப்பில், சுய அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கீதை அவ்வப்பொழுது அதை ஸாங்க்யயோகம் என்றும் குறிப்பிடுகிறது. அறிவார்ந்த பாகுபாடு நடைமுறையின் மூலம், ஞானி தன்னை உணர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறார், இது அனைத்து உடல் வடிவமைப்புகள் மற்றும் மாசுபாடுகளிலிருந்து வேறுபட்டது. சுய-உணர்தல் தவறற்ற நிலையின் இறுதி இலக்காகக் கருதப்படுகிறது. ஞான யோகம் என்பது கடவுளின் க்ருபையின் ஆதரவின்றி சுய முயற்சியை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இது கடினமான பாதை மற்றும் ஒவ்வொரு அடியிலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.

அஷ்டாங்க யோகம் (எட்டு-வழி யோகம்): இது இயந்திர நடைமுறைகளுடன் துவங்கி மனதின் கட்டுப்பாட்டிற்கு முன்னேறும் படிப்படியான புனிதப்படுத்தும் செயல்முறையை உள்ளடக்கியது. அதில், முதுகுத் தண்டுவடத்தில் உள்ள ஸுஷும்னா வழி மூலம் உயிர் சக்தி எழுப்பப்படுகிறது. இது மூன்றாவது கண்ணின் (உள் கண்) பகுதியான புருவங்களுக்கு இடையில் கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு மிகுந்த பக்தியுடன் ஒப்புயர்வற்ற இறைவன் மீது கவனம் செலுத்தப்படுகிறது.,

மகரிஷி பதஞ்சலியால் எழுதப்பட்ட யோக ஸூத்திரங்கள் என்ற புகழ்பெற்ற உரையில் எட்டு நிலைகளைக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட நடைமுறையில் இந்த செயல்முறை வழங்கப்பட்டது. இதன் மூலம், இது அஷ்டாங்-யோக் அல்லது யோகத்தின் எட்டு மடங்கு அமைப்பு என அறியப்பட்டது. இதன் ஒரு மாறுபாடு ஹட-யோகம் ஆகும், இதில் தவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஹட யோகி மனத்திட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் மனம் மற்றும் புலன்களின் மீது தேர்ச்சி பெற முயற்சி செய்கிறார்.

பல இடங்களில் வேத இலக்கியங்களும் கடவுளை உணர்ந்து கொள்வதற்கு 3 பாதைகளை மட்டுமே குறிப்பிடுகின்றன- கர்ம யோகம் ஞான யோகம் மற்றும் பக்தி யோகம்.

பக்தி யோகம் (பக்தியின் பாதை): இந்த பாதையானது தன்னலமற்ற மற்றும் பிரத்தியேகமான அன்பின் மூலம் கடவுளின் பெயர்கள், வடிவங்கள், நற்பண்புகள், பொழுது போக்குகள் போன்றவற்றுடன் மனதை இணைக்கிறது. கடவுளை நித்திய தந்தையாகவும், தாயாகவும், நண்பராகவும், எஜமானராகவும், ஆன்மாவுக்குப் பிரியமானவராகவும் பார்ப்பதன் மூலம் ஒருவர் அவருடன் அன்பான உறவை வளர்த்துக் கொள்கிறார். அவரிடம் சரணடைவதன் மூலமும், தனிப்பட்ட சித்தத்தை தெய்வீக சித்தத்துடன் இணைப்பதன் மூலமும், பக்தன் கடவுளின் அருளைப் பெறுகிறான், மற்றும் மற்ற பாதைகளை விட ஆன்மீக முழுமையின் இலக்கை எளிதாக அடைகிறான். பகவத் கீதை யோகத்தின் அனைத்து அமைப்புகளையும் உள்ளடக்கியிருந்தாலும், அது பக்தியின் பாதையை யோகத்தின் சிறந்த அமைப்பாக தொடர்ந்து வலியுறுத்துகிறது. பக்தியின் மூலம் மட்டுமே அவரை அறிய முடியும் என்று ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த தொடர்ச்சியான அறிவிப்பு வர்ணனையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இது பக்தி என்பது யோகத்தின் கீழ்த்தரமான அமைப்பு என்று சிலரிடையே உள்ள தவறான எண்ணத்தை அகற்ற எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

கர்ம யோகம் செயல் நெறிமுறை : கர்மம் என்பது ஒருவரின் உலகக் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதைக் குறிக்கிறது, அதே சமயம் யோகம் என்பது கடவுளுடனான ஐக்கியத்தைக் குறிக்கிறது. எனவே உலகில் ஒருவரின் கடமைகளைச் செய்யும் பொழுதும் மனதை இறைவனுடன் இணைக்கும் நடைமுறையே கர்மயோகமாகும். எல்லா வேலைகளும் கடவுளின் மகிழ்ச்சிக்காக மட்டுமே என்று புத்தியின் உறுதியான முடிவை வளர்த்துக் கொள்வதன் மூலம், செயல்களின் பலன்களிலிருந்து மனதை விலக்க வேண்டும். எனவே, கீதை எப்பொழுதாவது அதை புத்தி-யோக் அல்லது புத்தியின் யோகம் என்று குறிப்பிடுகிறது. பெரும்பாலான மக்கள் இல்லற வாழ்வில் வாழும் போதும், உலகக் கடமைகளைச் செய்யும்போதும் ஆன்மீகத்தை கடைப்பிடிப்பதால், மற்ற யோக அமைப்புகளை தொடர்வதோடு கர்ம யோகத்தை கடைபிடிப்பது அவர்களுக்கு அவசியமாகிறது.

` சில முக்கியமான சொற்களின் சுருக்கமான இந்த விளக்கத்துடன், ‘கடவுளின் பாடல்’ வழியாகச் சென்று, பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் வழங்கிய அற்புதமான தெய்வீக ஞானத்தை நேரடியாகக் கண்டறிவதை வாசகரிடம் விட்டுவிடுகிறேன்.

நன்றிக்கடன்

எனது குருதேவர் ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த மற்றும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அருளால்தான் என்னைப் போன்ற முக்கியமற்ற ஆன்மா, அவர் கொண்டிருக்கும் எல்லையற்ற ஞானத் தேக்கத்திலிருந்து ஒரு துளி அறிவைப் பெற முடிந்தது. இந்த பணிவான முயற்சி .மனித சேவையில் வேத அறிவைப் பிரசங்கிக்க வேண்டும் என்ற அவரது அறிவுறுத்தலை நிறைவேற்றுவதற்கான முயற்சி.

‘கடவுளின் பாடல்’ பொதிந்துள்ள மகாபாரதத்தை நமக்கு அருளிய அந்த மிக கருணை மிக்க வேத வியாச முனிவருக்கு அனைத்து மனித இனத்தின் கடமையை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த புத்தகம் வெளியிடப்பட்ட உண்மையான நோக்கத்தை நிறைவேற்றும் என்று நம்புகிறேன். மேலும், பூரணமான உண்மையை தேடுவோரின் அவர்களது கடவுள் உணர்தலில் இது உதவியாக இருக்கும் என்று நான் ப்ரார்த்திக்கிறேன்.

இறைவனின் சேவையில் ஸ்வாமி முகுந்தாநந்தா